இன்றைய காலத்தில் பல புதிய புதிய வீட்டு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று தான் நம் பாத்ரூம்மில் இருக்கும் ஷவர். இதுவரை குழாயைத் திருகியதும் மொட மொடவென தண்ணீர் வருவதைப் பார்த்திருப்போம், ஆனால் இந்த ஷவரைத் திறந்ததும் பூ மழைத் தூவியதுப் போல் தண்ணீரானது அளவோடு வெளிவரும்.
இந்த ஷவரை நீண்டநாள் பயன்படுத்தாமல் இருந்தால் நீர் வரும் பகுதி அடைபட்டு, நீர் பொழிவது குறைவாக இருக்கும். இந்த பிரச்சனையை பிளம்பரை அழைக்காமல் நாமே சரி செய்ய முடியும் என்று சொல்கின்றனர் சானிட்டரி சர்வீஸ் நிறுவனத்தினர்.
எப்படி சரி செய்யலாம்?
முதலில் தண்ணீர் பொழியும் பகுதியான ‘ஷவர் ஹெட்’-ஐ கழற்றி எடுத்து விடுங்கள். அந்த ‘ஷவர் ஹெட்’-ல் உள்ள சிறுசிறு துளைகளில் அடைப்பு இருந்தால் ‘டூத்பிக்’, ஊசி போன்றதொரு கூர்மையான பொருட்களை கொண்டு அடைப்புகளை நீக்குங்கள்.
பின்னர் வினிகரை ஒரு பாத்திரத்தில் நிரப்பி, அதனுள் அந்த சுத்தம் செய்யப்பட்ட ‘ஷவர் ஹெட்’-ஐ நாள் முழுக்க ஊற வையுங்கள். இதனால் ஷவர்ஹெட்டில் உள்ள உப்புத்தாதுப் படிகையை இந்த வினிகர் நீக்கிவிடும்.
சில சமயங்களில் ஷவரில் உள்ள ‘ஷவர் ஹெட்’-ஐ கழற்ற முடியாமல் இருக்கும். அப்படி இருந்தால், ‘ஷவர் ஹெட்’-ல் உள்ள சிறுசிறு துளைகளில் உள்ள அழுக்கை மட்டும் நீக்கிவிட்டு, அதன் மேல் வினிகரைத் தெளித்து வையுங்கள். மறுநாள் எழுந்து பார்த்தால், அது பூ மழைப் போல் அழகாகப் பொழியும்!